பாலியல் வன்கொடுமை குறித்த கருத்துக்கு ராகுல்காந்தி வீட்டில் நோட்டீஸ்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது பேசிய கருத்துக்கு டெல்லி போலீசார் தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை கடந்த செப் டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி ஜனவரி 30-ந் தேதி காஷ்மீரில் நிறைவு செய்தார். காஷ்மீரில் அவர் பேசும்போது ‘இன்னும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். நான் ஒரு பெண்ணிடம் கேட்டேன் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறினார். போலீசில் புகார் அளிக்கலாமே என கேட்டேன். அப்போது காவல் துறையை அழைக்க நான் வெட்கப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளதாக ராகுல்காந்தி பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியானது. பாலியல் வன்கொடுமை குறித்த கருத்து தொடர்பாக ராகுல்காந்திக்கு டெல்லி போலீசார் நேற்று நோட்டீஸ் வழங்கினார்கள். 3 மணிநேரம் காத்திருந்து அவரிடம் இந்த நோட்டீசை கொடுத்தார்கள். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதன் காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த நோட்டீஸ் தொடர்பாக டெல்லி போலீசார் இன்று ராகுல்காந்தி வீட்டுக்குச் சென்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா தலைமையில் ஒரு குழு அவரது வீட்டுக்குச் சென்றது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தங்களை அணுகிய பெண்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ராகுல்காந்தியிடம் போலீசார் கேட்டனர். ராகுல்காந்தி வீட்டுக்கு போலீசார் சென்றதை அறிந்ததும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு கூடினார்கள். அவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, ராகுல் காந்தியின் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ”இந்திய ஒற்றுமை யாத்திரை முடிந்து 45 நாட்கள் ஆகின்றன. உண்மையிலேயே டெல்லி போலீசாருக்கு அக்கறை இருந்திருந்தால், இத்தனை நாட்கள் ஏன் அமைதியாக இருந்தார்கள்? ஏன் அவர்கள் கடந்த மாதமே வரவில்லை? டெல்லி போலீசாருக்கு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சட்டப்படி உரிய பதிலை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

”சரியான காரணமின்றி ராகுல் காந்தியின் வீட்டிற்கு காவல்துறை சென்றுள்ளது என்றால் அது அமித் ஷாவின் அனுமதி இன்றி நடந்திருக்காது. ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் தொடர்பாக அவர் பதில் அளிப்பார். ஆனால், தற்போதே ஏன் போலீசார் அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என்று ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி விகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பி வரும் கேள்விகள் பிரதமர் மோடியை எந்த அளவு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதையே இந்த நாடகம் உணர்த்துவதாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.