அதிமுக – பாஜ கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது: எச்.ராஜா

‘அதிமுக – பாஜ கூட்டணி குறித்து மாநில தலைவர் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என அண்ணாமலையின் கருத்து பாஜ தேசிய குழு உறுப்பினர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று பாஜ தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக – பாஜ கூட்டணி குறித்து எந்த முடிவுகளும் மாநில தலைவரோ, மற்ற நிர்வாகிகளோ அறிவிக்க முடியாது. ஆலோசனைகள், வழிமுறைகள், கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆனால் கூட்டணி குறித்து பாஜவின் தலைமைக்குழு மட்டுமே முடிவு எடுக்கும். இது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வந்தது தான். கூட்டணி குறித்து பாஜ தலைமை தான் முடிவு செய்யும்.

அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா. அதுவரை அத்தை, அத்தை தான். அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், பாஜவுடன் கூட்டணி வேண்டாம் எனக் கூறி வருவதற்கு நான் பதில் கூற முடியாது. ஒரு சில தலைவர்கள் கூறியிருக்கலாம். அதற்கு பதில் கூற முடியாது. இவ்வாறு பேசினார்.