நெடுந்தீவு அருகே 12 புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்தது இலங்கை!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வானிலை காரணமாக எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால் இலங்கை கடற்படையினர் மற்றொரு பக்கம் சிக்கலாக உள்ளனர். அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக முதல்வரும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு பல்வேறு நேரங்களில் விரிவான கடிதங்களை எழுதியுள்ளார். இருப்பினும், இந்த விவகாரத்தில் இதுவரை தீர்வு கிடைக்கவே இல்லை.

இதற்கிடையே இப்போது மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறி விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.