செந்தில் பாலாஜி போன்ற அமைச்சரால் திமுகவிற்கு கெட்ட பெயர்: அன்புமணி!

அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது வழங்கும் எந்திரத்தை அறிமுகப்படுத்தியது முதலே அது பேசு பொருளாகிவருகிறது. 21 வயது ஆன நபர் என மிஷின் எப்படி கண்டுபிடிக்கும் என கேள்வி எழுப்பிய நிலையில், அது ஏற்கனவே இருக்கும் மால்களில் தான் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது எனவும், ஊழியர்களின் கண்காணிப்பில் தான் இயங்கும் என தமிழ்நாடு வாணிப கழகம் தெரிவித்தது. அதேபோல் கூடுதல் விலை உள்ளிட்ட காரணிகளை தடுப்பதற்காக இத்தகைய நடைமுறை அமல்படுத்தப்பட்டது எனவும் டாஸ்மாக் நிறுவனம் கூறியது. ஆனால் இதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. கல்வித்துறை, சுகாதரத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் கூட நவீன திட்டங்களை செயல்படுத்தாத விடியா திமுக அரசு, மது வழங்குவதற்கு நவீன திட்டத்தை செயல்படுத்தி உள்ளது என எதிர்கட்சி தலைவரும், அதிமுக தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த சூழலில் திமுக அரசு எதிராக போராட்டம் நடத்துவோம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அன்புமணி பேசியதாவது:-

சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது மது. தொடர்ந்து மதுவை எப்படி அதிகப்படுத்தலாம், எப்படி அதிகமாக விற்கலாம் என்று அந்த துறை அமைச்சர் பல புதிய திட்டங்களையும் புதிய யோசனைகளும் செய்து வருகிறார். டார்கெட் வைத்து மது விற்பனை நடந்து வருகிறது. இது கடுமையான கண்டனத்திற்கு உரியது. இந்தியாவிலே அதிக மது விற்பனை செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதிக மக்கள் மது அருந்துகின்ற மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதுவால் வருமானம் வருகிறது. தமிழக அரசினுடைய வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் மதுவால் வருகிறது என்பதை நினைத்தாலே ஆத்திரமாக இருக்கிறது.

தானியங்கி தொழில்நுட்ப எந்திரம் மூலம் மது கொடுக்கக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. ஆனால் அத்தகைய தொழில்நுடப்த்தை அறிமுகப்படுத்தி, தமிழக அரசு மதுவை பிரபலப்படுத்துகிறது. இது சட்டத்திற்கு விரோதமானது. சட்டப்பேரவையில் அறிவித்த 500 மது கடைகள் எப்போது மூடப்படும் என்ற பட்டியலை கொடுக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு எப்போது வரும் என்பதை திமுக அரசு தெரிவிக்க வேண்டும். செந்தில் பாலாஜி போன்ற அமைச்சரால் திமுகவிற்கு கெட்ட பெயர் தான் வரும், வந்து கொண்டிருக்கிறது. தானியங்கி தொழில்நுட்ப எந்திரம் மூலம் மது வழங்குவதை மூட வில்லை என்றால் நாங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை மனிதர்களாய் மாற்றிய மே நாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள பாட்டாளிகளுக்கு உளமார்ந்த தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் மறைமுகமாக மறுக்கப்பட்ட உரிமைகள் இப்போது நேரடியாகவே மறுக்கப்படுகின்றன.

உலகத் தொழிலாளர்கள் நாள் கொண்டாடப்படுவதன் காரணமே தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலைநேரம் இல்லாத அவலநிலையை மாற்றி, 8 மணி நேர வேலை என்ற உரிமை வென்றெடுக்கப்பட்டதை குறிப்பதற்காகத் தான். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணியாக உயர்த்தி மனிதர்களை அடிமைகளாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தற்காலிகமாக தடுக்கப்பட்டிருந்தாலும், முற்றிலுமாக முறியடிக்கப்படவில்லை. அதற்காக தொடர்ந்து போராட வேண்டும்.

பாட்டாளிகளே.. மனித நீதியாக இருந்தாலும், சமூக நீதியாக இருந்தாலும் நீங்கள் போராடாமல் உங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியாது. இதை உணர்ந்து நமக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் அனைத்தையும் வென்றெடுக்க ஒன்றுபடுவோம்; போராடுவோம்; வெற்றி பெறுவோம் என்று கூறி, மீண்டும் ஒரு முறை பாட்டாளிகள் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.