பிரிஜ்பூஷன் எம்.பி.யை உடனடியாக கைது செய்யவேண்டும்: மக்கள் நீதி மய்யம்

டெல்லியில் போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். குற்றம்சாட்டப்படும் பிரிஜ்பூஷன் எம்.பி.யை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அனுஷாரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே 85 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளதாக குற்றம்சாட்டப்படும் பிரிஜ்பூஷன் எம்.பி.யை உடனடியாக கைது செய்யவேண்டும். இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கையானது வெளியிடப்பட வேண்டும் என்பதே வீராங்கனைகளின் கோரிக்கைகள். இதுபோன்ற குற்றச்சாட்டுகளின்போது, அதிகாரத்தின் குறுக்கீடு இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசியமாகும். விளையாட்டில் இருந்து அரசியல் நீக்கப்படுவதுடன், ஊழல், முறைகேடு மற்றும் பாலியல் பிரச்சினைகளில் இருந்தும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளைப் பாதுகாக்க தக்க கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.