ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி: செப்.30 கடைசி நாள்!

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும். எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது. இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தொடங்கியது. இதனால், சந்தையில் அவற்றின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31ம் தேதி 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும். இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது. எனவே, அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, நாடு முழுவதம் ஒரே நாளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டுகளும், பின்னர் 200 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் தற்போது 2000 நோட்டுக்களின் புழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளே அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை பார்ப்தே அரிதாகிவிட்டது.

ரிசர்வ் வங்கி இதுபற்றி வெளியிட்டுள்ள தகவலின் படி, 89 சதவீத 2000 ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 2017ல் வெளியிடப்பட்டன. மார்ச் 2018ன் படி 6.73 லட்சம் கோடி ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. அதாவது 37.3 சதவீதம் என்கிற அளவில் புழக்கம் இருந்தன. ஆனால் 2023 மார்ச் 31ன் படி 3.62 லட்சம் கோடி ரூபாய் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்த செய்திக் கட்டுரையை தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ள ஜெய்ராம் ரமேஷ், “எங்கள் செல்ப் ஸ்டைல் விஸ்வகுருவின் (பிரதமர் நரேந்திர மோடி), எப்படீன்னா முதல் எதையும் யோசிக்காம செஞ்சுடுவாரு.. அதுக்கு அப்புறம் தான் அதை பற்றி யோசிப்பாரு” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவும் மத்திய அரசை கடுமையாக சாடியதோடு, “நவம்பர் 8 ஆம் தேதி 2016 இல் வந்த பேய் இப்போது மீண்டும் தேசத்தை வேட்டையாட வந்துள்ளது” என்று வேதனை தெரிவித்தார்.