பண்டிதர் அயோத்திதாசர் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமை: மு.க.ஸ்டாலின்!

அறிவுத்தளத்திலும், அரசியல் தளத்திலும் மிகப்பெரிய மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்தவர் பண்டிதர் அயோத்திதாசர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

திராவிடன், தமிழன் ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாளச் சொற்களாகப் பயன்படுத்திய முன்னோடியும், தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமையுமாகிய பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள். அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிடச் சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதுதான் முதன்மையானது என அவர் அன்றே முழங்கியது இன்றும் எண்ணிப் பார்க்கத்தக்கது. பண்டிதரின் கருத்துகளை ஊன்றிப் படிப்போம், அவரது பல்துறைப் பங்களிப்புகளை நமது அரசு அமைத்து வரும் நினைவு மண்டபம் உள்ளிட்ட முயற்சிகளின் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! அறிவுத் தளத்திலும் அரசியல் தளத்திலும் மிகப்பெரும் மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க!” இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.