2,000 ரூபாய் நோட்டு சம்பந்தமான அறிவிப்பால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: ஜி.கே.வாசன்

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது நாட்டு மக்கள், நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது நாட்டு மக்கள், நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. நம் நாடு – இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, சுக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஏராளம். அதாவது ஊழல், லஞ்சம், போதைப்பொருட்கள் கடத்தல், ஹவாலா மோசடி போன்ற குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து வைத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பாதகமே. அதே சமயம் இந்த அறிவிப்பால் நியாயமாக, நேர்மையாக செயல்படுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மொத்தத்தில் இந்த அறிவிப்பானது பண ஆசையில் தவறாக, குறுக்கு வழியில் செயல்பட நினைப்பவர்களுக்கு பொருத்தமான ஒன்று. குறிப்பாக சாமானியர்களும், நல்லவர்களும் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படமாட்டார்கள். நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பயனளிக்கும். எனவே ரிசர்வ் வங்கியின் 2,000 ரூபாய் நோட்டு சம்பந்தமான அறிவிப்பை த.மா.கா சார்பில் வரவேற்று, சாதாரணமானவர்கள், நேர்மையானவர்கள், நல்லவர்கள் வாழ்வில் மேம்பட இது போன்ற நல்ல நடவடிக்கைகள் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.