நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மதிமுக பங்கேற்காது: வைகோ

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில் மதிமுக பங்கேற்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிவசேனா, உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துள்ளதால் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

‘இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளன. எனவே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் அந்த நியாயமான கருத்தை ஏற்றுக்கொண்டு திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.