திமுகவுக்கு எதிராக எங்களை போராட வைக்க வேண்டாம்: வேல்முருகன்

எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு எதிராக நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களால் தான் அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதுபோலவே, உங்களுக்கு எதிராக எங்களை போராட வைக்க வேண்டாம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் திமுகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தன்னுடைய தனது தேர்தல் அறிக்கையில், 20 வருடங்கள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தது. ஆனால் 2 ஆண்டுகள் முடிந்த பிறகும் திமுக அரசு அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் கூறியதாவது:-

நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஜுன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட வேண்டும். தேர்தலுக்கு முன்பாக ஆயுள் கைதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டுமென போராட்டம் நடத்திய போது அதில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து பேசாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது எங்கள் கூட்டமைப்பு முன்னெடுத்த போராட்டங்களால் தான் அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அந்த நிலைக்கு எங்களை நீங்களும் தள்ளிவிட வேண்டாம் என எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளேன். ஒருவேளை எங்களது கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் ஜுன் மாத இறுதியில் அரசுக்கு எதிராக கோட்டை நோக்கி பேரணியாக செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.