தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. மறைமுகமாக தனியார் பால் விற்பனையை அரசே ஊக்கப்படுத்துவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது என்று எதிர்கட்சிகள் தமிழக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்து வருகின்றன. பால் கொள்முதலை அதிகரித்து, பால் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்துள்ளார். கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்து விட்டேன். தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலகத் தரம் வாய்ந்த எந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.