ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடன் கெஜ்ரிவால் சந்திப்பு!

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து டெல்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.
இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து மாநிலங்களவையில் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்கக் கோரி வருகிறார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரியுள்ளார். கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் சென்றுள்ளார்.

முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.