புதிய நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது: சு வெங்கடேசன்

புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும் சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்பி சு வெங்கடேசன் குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த மே 28ம் தேதி இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற திறப்பு விழா அன்று தமிழ்நாட்டில் இருந்து செங்கோல் கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் விசேஷ பூஜைகளுடன் பிரதமர் நரேந்திர மோடியால் அது நிறுவப்பட்டது. அதன்பின்னர் நாடாளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலைப் போராட்டம் ஆகிய எதுவும் இவர்களின் நினைவில் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு வெங்கடேசன் எம்பி குற்றம்சாட்டி உள்ளார்.

மதுரை எம்பி சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும் சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச விடுதலைப் போராட்டம் ஆகிய எதுவும் இவர்களின் நினைவில் இல்லை. நாடாளுமன்றம் பாஜக அலுவலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அவையின் நுழைவாயிலில் கையில் தண்டம் ஏந்தி, விரல் நீட்டி ஆவேசமாகக் காட்சியளிக்கும் சாணக்கியனை பிரமாண்டமாக நிறுவியுள்ளனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்பந்தம்? அரசமைப்புச் சட்டத்திற்குரிய இடத்தில் அர்த்த சாஸ்திரத்துக்கு என்ன வேலை?

கட்டடத்தின் நடுவில் சுமார் இருநூற்று ஐம்பதடி நீளத்தில் விஷ்ணு புராணத்தில் உள்ள பாற்கடலைக் கடையும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடபுத்தகங்களில் இருந்து ஜனநாயகக் கோட்பாடுகளை நீக்குவதும் நாடாளுமன்றத்தைப் புராணக் காட்சிகளாக மாற்றுவதும் நேரடி இந்துத்துவா நடவடிக்கையாகும். அரசமைப்புச் சட்ட வரைவிற்கு நந்தலால்போஸ் வரைந்த 22 ஓவியங்களில் இருந்து 16 ஓவியங்கள் மறுஉருவாக்கம் செய்துள்ளதாக சொல்லப்பட்டு அதற்கு நேர் எதிரான கருத்துகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தியா அனைவருக்குமானது என்பதையே சிதைக்கும் கோட்பாடுகளால் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.