பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சசிகலா!

தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்தே ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அரசை சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியை அடுத்த செங்கனூர் என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் உயிரிழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் ஆறு நபர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

சமீப காலமாக தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு அதில் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. பட்டாசு ஆலைகளில் போதிய பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனரா? என்பது தெரியவில்லை. பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து செயல்படக்கூடிய வகையில் தமிழக அரசே பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து அங்கு பட்டாசு ஆலைகளை நிறுவ செய்வதன் மூலம் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இயலும்.

திமுக தலைமையிலான அரசோ பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுப்பதற்கு வேண்டிய எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

திமுக தலைமையிலான அரசு இனி வரும்காலங்களில் தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்தே ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற வெடி விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில், தேவையான நிரந்தர தீர்வை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.