ஜம்முவில் புதியதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார்.

திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது. ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது. இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது. இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்று மாலை இந்த கோவிலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர். நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது.