ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம்: டி.டி.வி. தினகரன்

துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்வோம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

மணமக்கள் அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும். மனிதர்களின் வாழ்விலே திருமணம் தான் மகிழ்ச்சியான தருணம். இந்த திருமணத்தை நடத்தி வைத்ததில் மகிழ்ச்சி என்றால், அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து திருமணத்தை நடத்தி வைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இன்றைய தினம் அனைவரும் ஒன்றாய் ஒரே கூரையின் கீழ் இணைந்துள்ளோம்.

6 ஆண்டுகளுக்கு முன்பு சிலரின் துரோகத்தால், சுயநலத்தால் அ.ம.மு.க. என்ற கட்சி இயக்கத்தை தொடங்க வேண்டியதாகி இருந்தது. ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவே அ.ம.மு.க.வை தொடங்கினேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னீர்செல்வத்துடன் பேசி ஒன்றாக செயல்படுவோம் என கூறினோம். அரசியலையும் தாண்டி எனக்கு அவருடன் நட்பு தொடர்ந்து வருகிறது. அதன்படி தற்போது அனைவரும் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். அ.தி.மு.க, அ.ம.மு.க இணைந்து கைகோர்த்து ஒன்றாக செயல்பட தொடங்கிவிட்டது. துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.