தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு எதுவுமே செய்யவில்லை என அமித் ஷா வாக்குமூலம்: டி.ஆர். பாலு

தமிழ்நாட்டுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை என அமித் ஷா வாக்குமூலம் அளித்துள்ளதாக திமுக எம்.பி. டிஆர். பாலு கூறியுள்ளார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்தியில் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியவல்லை. இதனால் கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு என்னவோ பல திட்டங்களை அள்ளி வீசியது போல கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த அமித் ஷா முயற்சி செய்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக இருந்த போது, தமிழ்நாட்டிற்கு சாதித்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அழகாக பட்டியலிட்டார். ஆனால், வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா அப்படி எந்த சிறப்புத் திட்டத்தையும் சுட்டிக்காட்ட முடியாமல் திணறிப்போனார். எனவே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசி, “தமிழ்நாட்டுக்கு பாஜக ஆட்சியில் ஒரு சிறப்புத் திட்டமும் நிறைவேற்றவில்லை” என வெளிப்படையாக பேசி கைவிரித்துவிட்டார்.

அமித் ஷா சுட்டிக்காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள் ஆகியவை ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். எந்த அரசு ஒன்றியத்தில் இருந்தாலும் இதை தடுக்க முடியாது. ஜிஎஸ்டி மூலம் தமிழ்நாட்டில் இருந்து அதிக வருவாய் ஒன்றிய அரசுக்கு கிடைத்த போது, தமிழ்நாட்டை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அந்த வருவாயை, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் தாராளமாக செலவழிப்பதுதான் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி.

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு எப்படி வஞ்சித்துள்ளது என்பதற்கு சில உதாரங்களை கூற வேண்டியது அவசியம். ஒன்றிய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஆணையம் பகிர்ந்தளிப்பது குறைக்கப்பட்டுள்ளது பாஜக தலைமையிலான ஆட்சியில்தான். ஒன்றிய வரி வருவாய்க்கு தமிழ்நாடு அளிப்பது 1.6 லட்சம் கோடி ரூபாய். ஆனால், அந்த வருவாயில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுப்பது வெறும் 41 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு 100 ரூபாய் கொடுத்தால் அது பதிலுக்கு 20 ரூபாயை அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் 2.47 லட்சம் கோடி ரூபாயை பிரதமர் அளித்ததாக கூறும் போது, அதே காலக்கட்டத்தில் உத்தரபிரதேசத்துக்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை அள்ளித் தந்ததை அமித் ஷா ஏன் மறைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களை இந்தியமயமாக்கி, அங்கு தமிழ்நாட்டு இளைஞர்களே வேலைக்கு செல்ல முடியாத நிலையை உருவாக்கிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்தான் என்பதை அமித் ஷா மறுக்க முடியுமா?

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. அதற்கும் பாஜக அரசு ஒன்றும் பங்களிப்பு செய்யவில்லை. ஏதாவது ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தைக் கொண்டுவந்தால் கூட ஆந்திரம், கா்நாடகம் பயன்பெற்று அதில் மீதி தமிழ்நாடு பயன்பெறும் வகையில்தான் மத்திய பாஜக அரசு திட்டமிட்டதே தவிர, தமிழகத்துக்கு என்று பிரத்யேகமாக எந்த நெடுஞ்சாலை சிறப்புத் திட்டத்தையும் அளிக்கவில்லை. மேலும், தமிழகத்துக்கு வர வேண்டிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் அழுத்தத்துக்குப் பயந்து மாற்ற, தமிழக மக்களை பாஜக அரசு வஞ்சித்தது.

9 ஆண்டுகால பாஜக ஆட்சி என்பது சென்னை மாநகரத்துக்குப் பேரிடா் மேலாண்மைக்காக நிதி ஆணையம் பரிந்துரைத்த ரூ.500 கோடியை இரண்டு ஆண்டுகளாக கொடுக்காத ஆட்சி; 2015-இல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டாத ஆட்சி; இதுவரை அதற்கு நிதிகூட ஒதுக்காமல் அநீதி இழைக்கும் ஆட்சி; சென்னை மெட்ரோ ரயில்-2 -ஆம் கட்ட திட்டத்துக்கு 2019-இல் நிதி கேட்டும் இது வரை ஒப்புதல் வழங்காத ஆட்சி; தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத்துக்கான கோரிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்துள்ள ஆட்சி; ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்த ஆட்சி.

பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை என்கிறாா். வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ என அனைத்தையும் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக்கி விட்டு, தாங்கள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? எனவே, மூழ்கும் கப்பலாக இருக்கும் பாஜக இன்னும் எத்தனைக் கற்பனை கதைகள், ஏவல் படைகளுடன் தமிழகத்தில் நுழைந்தாலும், ஒரு தொகுதியில்கூட தமிழக மக்கள் வெற்றியைத் தரமாட்டாா்கள். இவ்வாறு டி.ஆா்.பாலு கூறியுள்ளார்.