700 இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

போலி சேர்க்கை கடிதங்களைப் பெற்று கனடாவில் உயர் கல்வி படிக்கச்சென்ற 700 மாணவர்கள் நாடு கடத்தப்பட இருந்தனர். இந்நிலையில் கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு படிப்பதற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்த ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்டு, போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி உள்ளார். முதலில் இது அவர்களுக்கு தெரியவில்லை. பின்னால்தான் தெரிய வந்தது. இந்த போலி சேர்க்கை கடிதங்களால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானது. அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொராண்டோவில் உள்ள சி.பி.எஸ்.ஏ. என்று அழைக்கப்படுகிற கனடா எல்லை பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுத்தது. அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கான நோட்டீசுகளும் வழங்கப்பட்டன. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்த மாணவர்கள் அங்கே வீதியில் இறங்கி போராடினார்கள்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், கனடா வெளியுறவு மந்திரியிடம் பிரச்சினையை எடுத்துச்சென்றார். மேலும் வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு), கடந்த ஏப்ரல் மாதம் கனடா சென்றிருந்தபோது இந்த விவகாரத்தை அந்த நாட்டின் அரசிடம் எழுப்பினார். இது தொடர்பாக டொராண்டாவில் உள்ள இந்திய தூதரகமும், பிரச்சினைக்குள்ளான இந்திய மாணவர்களைச் சந்தித்தது. இந்த பிரச்சினையில் தவறு மாணவர்கள் பக்கம் இல்லை என்பதால் மனிதநேய அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கனடா அரசிடம் மத்திய அரசு மீண்டும் மீண்டும் முறையிட்டது. கனடாவில் உள்ள எம்.பி.க்களும் கட்சி வித்தியாசமின்றி, இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நின்றனர். அதைத் தொடர்ந்து கனடா குடியேற்றத்துறை மந்திரி சியான் பிரேசியர், கனடாவில் நிச்சயமற்ற தன்மையை சந்தித்து வருகிற சர்வதேச மாணவர்களின் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு கனடா அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது என தெரிவித்தார். மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், “கனடாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையில், கனடா அரசு மனிதநேய அணுகுமுறையை பின்பற்றியதற்கு காரணம், இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வந்த முயற்சிகள்தான். இதை வரவேற்கிறோம்” என தெரிவித்தன.