அமலாக்கத்துறை ரெய்டு மூலம் திமுக அரசை மிரட்டுறீங்களோ?: வைகோ

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான பணமோசடி உள்ளிட்ட வழக்குகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கரூர் ஆகிய இடங்களில் அதிவிரைவுப்படை குவிக்கப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மின்சாரத்துறை மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட வந்தபோது, முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், சோதனை நிறைவுபெற்றவுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்று நினைத்து தலைமைச் செயலகத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறது.

மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், இவ்வாறு அமலாக்கத்துறை அத்துமீறி நுழைவது மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன. தமிழ்நாட்டிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துவதும், திமுக அரசை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.