தமிழ்நாட்டில் சிபிஐக்கு பொதுவான முன் அனுமதி ரத்து: தமிழ்நாடு அரசு!

மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை திரும்பப் பெற்று இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act. 1946 (Central Act XXV of 1946)}-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டு இருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டு உள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக. தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய விசாரணை நிறுவனங்களான சிபிஐ, என்.ஐ.ஏ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்றவற்றை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடங்கி தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜி வரை பலரை மத்திய புலனாய்வு நிறுவனங்கள் விசாரணைக்கு அழைப்பது, கைது செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இதுபோல் கைதாகி உள்ளார். டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் சகோதரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினரும் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகருமான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் உள்ளனர். அதேபோல் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக்கும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.