காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களை ஒழிக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச எல்லையான குப்வாராஜுமகுந்த் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் அவர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஏன் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றனர் என தெரியவில்லை. அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் நாசவேலைக்காக பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்பகுதியில் பயங்கரவாதிகள் வேறு யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், “ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுன்ட்டர் இன்று அதிகாலை தொடங்கியது. வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் ஜாமகுண்ட் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வந்தத் தகவலின் அடிப்படையில் என்கவுன்ட்டர் மேற்கொள்ளப்பட்ட்து” என்றார்.

காஷ்மீர் கூடுதல் டிஜிபி விஜய குமார் கூறுகையில், “என்கவுன்ட்டரில் ஐந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.