ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகிவிட்டது: வீரமணி

தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்கும் வசதி உள்ள மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் வெற்றி கிடைத்ததாக ஆய்வுகள் கூறுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் 37 பேர் ‘நீட்’ பயிற்சி மையங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியில் முன்னேறிய குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதால், ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகிவிட்டது. இந்த ஆபத்தினைத் தொடர்ந்து நாம் கூறி வந்திருக்கிறோம் – போராடியும் வந்திருக்கின்றோம்.

2023 ஆம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் முதல் 50 இடங்களில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் இதோ: 2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில், தேசிய அளவில் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வு நடத்தியுள்ளது. அவர்களில் 38 மாணவர்களின் பள்ளி, கல்வி வாரியம், ‘நீட்’ தேர்வுக்காக பெற்ற பயிற்சி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த 38 மாணவர்களில் 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள்; 5 பேர் ஆந்திர மாநில பாடத் திட்டத்திலும், 3 பேர் மராட்டிய மாநிலப் பாடத் திட்டத்திலும், 2 பேர் மேற்குவங்க மாநிலப் பாடத் திட்டத்திலும் படித்தவர்கள். அதேபோல், விவரங்கள் சேகரிக்கப்பட்ட 38 பேரில், 29 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்த உயர்ஜாதி மாணவர்கள். 7 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள். சாதனை படைத்த மாணவர்கள் 38 பேரில் 37 பேர் ‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்புப் பயிற்சி பெறாதவர். ஆனால், அந்த மாணவர் டெல்லியின் புகழ்பெற்ற பொதுப்பள்ளியில் படித்தவர். சாதித்ததாகக் கூறப்படும் அனைவருமே டெல்லி, புனே, கொல்கத்தா, நாக்பூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், சென்னை போன்ற பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள். அனைவருமே பொருளாதார அடிப்படையில் வலிமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் மேற்கொண்ட இந்த ஆய்வுகளில் இருந்து, ‘நீட்’ தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த குடும்பங்களின் மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் மருத்துவப் படிப்பை ‘நீட்’ தேர்வு ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கி விட்டது. மருத்துவக் கல்வி என்பது உயர்ஜாதியினர், பணக்காரர்கள், நகர்ப்புறத்தார் வயிற்றில் அறுத்துக்கட்டத்தான் என்பதும் வெளிப்படையாகிவிட்டது. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திராவிடர் கழகம் எதைச் சொல்லி வந்ததோ, அது நடந்தே விட்டது.

பொதுவான ‘நீட்’ இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களையும், கிராமப்புற மாணவர்களையும் பாதிக்கக் கூடியதே! தமிழ்நாட்டில் நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வு வேறு மாநிலங்களில் இல்லாமல் இருப்பது ஆதிக்கவாதிகளுக்கு – உயர்ஜாதியினரின் மேலும் முன்னேற்றத்திற்கான வழிகோலும் ஆட்சியாளர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘நீட்’ டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குக் கோரும் சட்ட முன்வடிவு ஆளுநர் மாளிகையில் குறட்டை விட்டது போதாது என்று, இப்பொழுது குடியரசுத் தலைவர் மாளிகையில் உறங்குகிறது. இது அரசியல் பிரச்சினையல்ல – பெரும்பாலான மக்களின் ஜீவாதாரமான சமூகநீதிப் பிரச்சினை. சமூகநீதி சக்திகள் வலுவாக ஒன்றிணைந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு ‘நீட்’ டைக் குழிதோண்டிப் புதைக்க முன்வரவேண்டும். இல்லையெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவு மண்மூடிப் போய்விடும், எச்சரிக்கை! இவ்வாறு கி வீரமணி கூறியுள்ளார்.