தலைமை செயலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினரை கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்

தமிழக தலைமை செயலகத்தில் நுழைந்து சோதனை நடத்திய அமலாக்கத்துறையினரை கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து கழகங்களில் பணி வாங்கி தருவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை தொடங்கினர். இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் கரூரில் உள்ள அவரது இல்லம் மற்றும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகங்களில் நுழைந்தும் அமலாக்கத்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்னும் சில நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை என்பது பழிவாங்கும் செயலாக இருக்கிறது என திமுக மற்றும் அதன் தோழமை கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதோடு மட்டுமின்றி தலைமை செயலகத்தில் நுழைந்து அமலாக்கத்துறையினர் சோதனையிட்டு இருப்பதையும் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் அமலாக்கத்துறையினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛தலைமை செயலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஏன்? அதிகாரம் என்னிடம் இருந்தால் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.