மணிப்பூர் வன்முறை குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் தாமதமான நடவடிக்கை: காங்கிரஸ்

மணிப்பூர் வன்முறையில் மத்திய அரசின் அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் தாமதமான நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து சுமார் 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் வரும் ஜூன் 24-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

மணிப்பூரில் மரணங்கள் மற்றும் பேரழிவு ஏற்பட்டு 50 நாட்கள் கடந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மணிப்பூர் மக்களிடம் பேசிய பின்னர் தான் மத்திய அரசு விழித்திருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாதது, அவரின் கோழைத்தனத்தையும், அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாததையும் உணர்த்துகிறது. இவ்வளவுக்கும் பல்வேறு பிரதிநிதிகள் பிரதமருடன் பேச நேரம் கேட்டும் அவர் அதற்கு நேரம் ஒதுக்கவில்லை.

இதற்கு முன் உள்துறை அமைச்சரே நேராக சென்று அங்குள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அமைதி ஏற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிலைமை அதற்குப் பின்னர் மிகவும் மோசமடைந்தது. அவரது தலைமையில் எப்படி நாம் அமைதியை எதிர்பார்க்க முடியுமா?. மேலும் மாநிலத்தில் பாகுபாடான அரசு தொடர்வதும், இன்னும் குடியரசுத் தலைவர் ஆட்சி இன்னும் அமல்படுத்தப்படாமல் இருப்பதும் கேலிக்கூத்தாக உள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்புவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு இனக்குழுக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசியல் தீர்வு காணவேண்டும். இவைகளை டெல்லியில் இருந்து கொண்டு செய்வது முக்கியத்துவம் இருக்காது. மணிப்பூர் விஷயத்தில் மத்திய அரசின் தீவிரமான தலையீட்டை ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்க்கிறது. இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.