மின் கட்டண உயர்வுக்கு பாஜக- அதிமுக கூட்டணிதான் காரணம்: கே.எஸ். அழகிரி

மின் கட்டண உயர்வுக்கு பாஜக- அதிமுக கூட்டணிதான் காரணம் என்றும் தமிழக அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 20 சதவீதம் கூடுதலாக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் அறிவிப்பு மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான 5 மணி நேரம் அதிக மின் பயன்பாடு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், மின் தேவை அதிகம் உள்ள நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 20 சதவீதம் மின் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கப்படும் என மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த மின்சார பயன்பாட்டுக்கு மத்திய அரசின் கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தும். இது பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட கடும் தாக்குதலாகவே கருத வேண்டும். இத்தகைய கட்டண உயர்வை பொதுமக்கள், தொழில்துறையினரோ எதிர்கொள்ள முடியாத வகையில் கடும் சிரமத்துக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஜனவரி 2017 இல் பாஜக அரசின் நெருக்கடியால் உதய் மின் திட்டத்தில் அன்றைய மின்துறை அமைச்சர் பி. தங்கமணி தமிழகத்தை 21-வது மாநிலமாக இணைத்ததால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அத்தகைய இணைப்பின் மூலம் ரூபாய் 11, 000 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சேமிப்பு என்று அன்றைய அதிமுக மின்துறை அமைச்சர் கூறியதையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் 92 சதவீத கடன்களையும் உதய் திட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறியதையும் எவரும் மறந்திட இயலாது. அன்றைய மின்துறை அமைச்சர் இதற்கு மாறாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கடன் 2015ல் ரூபாய் 81, 312 கோடியாக இருந்தது, மார்ச் 2020-ல் ரூபாய் 1. 23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி கடன் சுமை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்ததனால் கடன் சுமை குறைவதற்கு மாறாக அதிகரித்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

எனவே, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். பாஜக அரசு விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வரும் நிலையில் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த மின் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.