மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தம்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் இம்பாலில் ராகுல் காந்தி பொதுமக்களை சந்திக்க அங்கு ஆளும் பாஜக அரசு அனுமதிக்க மறுத்துவிட்டது.

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினரிடையே வன்முறை வெடித்தது. கடுமையான வன்முறை காரணமாக மணிப்பூர் மாநிலமே வன்முறை களமாக மாறி உள்ளது. அமைதி நடவடிக்கை மேற்கொள்ள ராணுவம் அங்கு குவிக்கப்படுள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கள ஆய்வு செய்தார். அதன்பிறகே அங்கு படைகள் குவிக்கப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் தீவிரமான ரோந்து பணியில் இறங்கி உள்ளது. ”

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு இன்று மதியம் சென்றடைந்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவிக்க முயன்றார். ஆனால் மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ராகுல் காந்தி பொது மக்களை சந்திக்க போலீசார் தடை விதித்தனர். பிஷ்னுபூர் பகுதியில் ராகுல் காந்தி சென்ற கார் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.