இலங்கைக்கு உலக வங்கி ரூ.5,600 கோடி கடன்!

இலங்கைக்கு ரூ.5,600 கோடி கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தது. மக்கள் தெருவில் இறங்கி போராடினார்கள். அதனால், அதிபர், பிரதமர் பதவி விலகினர். இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்தன.

இந்நிலையில், இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் (ரூ.5 ஆயிரத்து 600 கோடி) கடன் வழங்க உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. உலக வங்கி இயக்குனர்கள் வாரிய கூட்டத்தல் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்காகவும், ஏழைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் இந்த கடன் அளிக்கப்படுவதாக உலக வங்கி கூறியுள்ளது. இலங்கைக்கு பன்னாட்டு நிதியம் ரூ.23 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்க கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டது. அதன்பிறகு கிடைக்கும் மிகப்பெரிய கடன் இதுவாகும்.