ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடரின்போது வணிகம் மற்றும் பிற பொருட்கள் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலமாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாக இருக்கும்.

முன்னதாக எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.