தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானது: ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதனம் தோன்றியதே தமிழகத்தில்தான் என கூறியுள்ள ஆளுநர் ஆர்என் ரவி, சனாதனம் மக்களை பிரிக்கிறது என்று கூறுவது தவறு என தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் நடந்த ஸ்ரீராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் இன்று கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் இந்த நிலம் ஒரு புனித பூமி. இங்கிருந்து ஆயிரக்கணக்கான ரிஷிகள், ஞானிகளை உருவாகி மனித குல நன்மைக்காக உழைத்திருக்கிறார்கள். இந்த நிலத்தில்தான் சனாதன தர்மம் உருவாகியது. இந்த தர்மம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தர்ம இலக்கியங்கள் என்று பொருள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் பாரதம் என்பது இருக்கிறது. பாரதம் என்றால் என்ன, நமது இந்திய அரசியலமைப்பு பிரிவு 1, பாரதம் என்றால் இந்தியா என்கிறது. இந்தியாவுக்கு அறிமுகம் தேவை. பாரதத்திற்கு தேவையில்லை. ஏனென்றால் பாரதம் நமது அன்றாட வாழ்வில் அனைவருடனும கலந்தே இருக்கிறது.

இந்த மண் திருமூலர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற பல ஞானிகளை தந்துள்ளது. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சனாதன தர்மத்தை கடத்தி வந்திருக்கிறார்கள். அவர்களின் தொடர்ச்சியாக 400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்தான் ஸ்ரீராகவேந்திரா. சனாதன தர்மம் நீண்ட தொடர்ச்சியாக இன்றுவரை நம்மிடம் இருந்து வருகிறது. இப்படியான நீண்ட பாரம்பரியத் தொடர்ச்சி உலகில் வேறு எங்கும் கிடையாது.

சிலர் தனது அறியாமையால் சனாதன தர்மம் பிரிவினையை, தீண்டாமையை போதிக்கிறது என்று கூறுகிறார்கள், ஒருபோதும் அப்படி இல்லை. மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை. சனாதன தர்மத்தில் தீண்டாமைக்கு இடமில்லை. இந்த மண்ணில் சனாதனம் நீடித்து நிலைத்திருக்கிறது. இங்கிருந்து அந்த ஒளி நாடு முழுவதும் பரப்பப்பட்டிருக்கிறது. இந்த மண்ணில் இல்லாமல் வெளியில் பிறந்தவர்கள் கூட இங்கு வந்து அந்த ஒளியைக் கண்டடைந்திருக்கிறார்கள். நரேந்திரன் இங்கு வந்து ராமகிருஷ்ண பரமஹம்சரால்தான் விவேகானந்தர் ஆனார்.

பாரதமும் சனாதன தர்மமும் பிரிக்க முடியாதவை. சனாதான தர்மம் வளரும்போது பாரதமும் வளரும், சனாதன தர்மம் வீழும்போது பாரதமும் வீச்சியடையும் என்று அரவிந்தர் கூறியிருக்கிறார். சனாதன தர்மம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதைப் பேசுகிறது. சனாதானத்தில் பிரிவுகள் இருக்கின்றன. வேறுபாடுகள் கிடையாது. இந்த உள்ளொளி உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும். அது பாரதத்தின் கடமை. அதற்கு பாரதம் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும்.

நீங்கள் பலவீனமாக இருக்கும்போது எதிரிகளால் சூழப்பட்டிருப்பீர்கள். பலமாக இருக்கும்போது நண்பர்கள் சூழ்ந்திருப்பார்கள் என்று சுக்கிர நீதி சொல்கிறது. இதுதான் பாரதத்தின் இலக்கு. இந்த பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகுதான் ஆங்கிலம்தான் உயர்ந்தது என்றும், அவர்களுடைய கலாச்சாரம்தான் சிறந்தது என்றும் பரப்ப தொடங்கினார்கள். நமது அரசியலமைப்பு வரை படத்தில் கூட குருகுல காட்சிகள்தான் இடம் பெற்று உள்ளன. ஆனால் ஆங்கிலேயர்கள்தான் பிரிவினைவாதங்களை தொடங்கி வைத்தார்கள். 1947-க்கு பிறகு தான் இந்தியாவே உருவானது போல சிலர் சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது. நமது இந்த புனிதமான மண்ணில் எத்தனையோ மகான்கள் பிறந்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள். இதைத்தான் பிரதமர் நிர்ணயித்துள்ளார். அவர் பாரதம் மற்றும அதன் மக்களின் பலத்தை உணர்ந்திருக்கிறார். அவர் அமிர்த் கல் என்று ஒன்றை நிர்ணயித்துள்ளார். ஒரு காலத்தில் இந்தியாவின் பேச்சை மற்ற நாடுகள் கவனிக்காது, ஆனால் இப்போது நமது பிரதமர் பேசும் போது உலகமே உற்றுப் பார்க்கிறது. நமது பிரதமர் பாரதத்தின் நாடி துடிப்பை அறிந்து வைத்துள்ளார். அடுத்த 25 வருடங்களில் இந்தியா சனாதன ஒளியை உலகம் முழுவதும் பரப்பும் திறனுடையதாக இருக்க வேண்டும். தமிழகம் புனிதமான பூமி. சென்னையும் அழகான நகரம். இங்கு ஆங்காங்கே கழிவுநீர் ஓடுகிறது. ஓடைகள் திறந்து கிடக்கிறது. அவைகளையெல்லாம் சீர்படுத்த வேண்டும். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான சென்னை கிளை உறுப்பினர் சேகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.