கர்நாடகாவில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது: அண்ணாமலை

கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்றால், அவரை மீண்டும் தமிழ்நாட்டுக்குள் வர விடமாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாகப் பேசியுள்ளார்.

பாஜக சார்பில் கரூரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக மாற்றத்திற்கான மாநாடு நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியல் கெட்டுப் போய் இருக்கிறது என்றால் அதற்கும் மையப்புள்ளியாக கரூர் மாறியிருந்தது. ஓட்டுக்கு பணம் என்ற அவமானம் கரூரில் எப்போதும் இருந்தது. அதற்கு இங்குள்ள அரசியல் காரணம். ஆன்மிகத்திற்கு பெயர் போன மண், தற்போது அரசியல்வாதிகள் சிலரின் கெட்ட செயலால் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஊராக கரூர் மாறியிருக்கிறது. இழந்த பெருமையை கரூர் திரும்பப் பெற வேண்டும். இதனால் தான் பாஜக மாநாட்டுக்கு மாற்றத்திற்கான மாநாடு என பெயர் வைத்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார்கள் என்பதற்காக பா.ஜ.க தொண்டர்களை கைது செய்கிறார்கள். தற்போது நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கும் தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதால், அவரது மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க கரூர் கலெக்டரும், கரூர் எஸ்.பியும் போட்டி போடுகின்றனர். இந்த மாநாடு கூட, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி தான் நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் திமுக முழுவதுமாக அழியும் நேரம் வந்துவிட்டது. எங்கேயும் தி.மு.கவின் அடிச்சுவடே இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இந்த ஆண்டு காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு கிடையாது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்க்கட்சி கூட்டத்திற்கு கர்நாடகாவிற்கு வரும் 13-ஆம் தேதி செல்வார் என பார்ப்போம். கர்நாடகாவில் நடைபெறும் எதிர்க்கட்சிக் கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தால் காவிரி நீர் விஷயத்தில் அவருடன் பாஜக துணை நிற்கும். கடந்த, 2004ல் கூட்டணி சேர்ந்த கட்சிகள், 2024ல் கூட்டணி சேர முயற்சிக்கின்றன. காரணம், கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கத்தான். முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகாவிற்கு சென்றால் அவர் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் வரமுடியாது. வருவதற்கும் நாங்கள் விடமாட்டோம். தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தரமுடியாது என கூறிய பிறகும், அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு தமிழினத்தை அடமானம் வைத்து விட்டு, அரசியல் லாபத்திற்காக முதலமைச்சர் சென்றால் பா.ஜ.க அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. கோட்டையை முற்றுகையிடுவது மட்டும் இல்லை. நீங்கள் எப்படி கோட்டைக்குள் செல்கிறீர்கள் என்று பார்ப்போம். தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் அண்மையில் நடந்த நிலையில் இரண்டாவது ஆலோனைக் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வரும் 13-14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் தான் அந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கக்கூடாது எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.