ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை 80% பெண்களுக்கு கிடைக்காது: அண்ணாமலை

தமிழ்நாட்டில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை, உரிமைத்தொகை பெற திமுக உறுப்பினர் அட்டை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருக்கலாம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில், பெண்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பட்ட திட்டங்களில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம். இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் நிபந்தனைகள்: அதைத்தொடர்ந்து, மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது. 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது என்பது போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனை விதித்தது. நேற்றைய தினம், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை திமுக அரசு வெளியிட்டுள்ளது. அதில், குடும்பத்தின் மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது, இவர்கள் கொடுப்பதாகக் கூறிய மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வாங்க, குடும்பத்தில் யாருமே வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் உள்ளது. திமுகவினர் போல் அல்லாமல் தமிழக மக்கள் கடினமான உழைப்பாளிகள். வேலைக்குச் செல்லாமல், டீக்கடை, பஜ்ஜிக் கடை, பிரியாணி கடையில் பாக்ஸிங் செய்து திரிய, தமிழக மக்கள் அனைவரும் திமுகவினர் இல்லை என்பதை, முதலமைச்சருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அடுத்த தகுதி, மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாதாம். தமிழ்நாட்டில் 99.6 லட்ச வீடுகள், 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று, சென்ற ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு தெரிவித்தது. இந்த 99.6 லட்ச குடும்பங்களிடமும் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாதம் 300 யூனிட்டுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படாது என்ற விசித்திரமான நிபந்தனையை இட்டுவிட்டு, ஒரு கோடி மகளிர் பயனடைவார்கள் என்று எப்படிக் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக, திமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டு இருக்கலாம். உங்கள் நிபந்தனைகள் பெரும்பாலும் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு அல்ல. நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழ்நாட்டில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. முதல்வரிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.