தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கவலை இல்லை: மு.க.ஸ்டாலின்

எந்த சூழ்நிலை வந்தாலும், ஏன் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்லத்திருமண விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் சிற்றரசு- எழிலரசி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இன்றைக்கு இந்தியாவிற்கு ஆபத்து வந்திருக்கிறது. ஆபத்து என்று சொல்வதை விட பேராபத்து வந்திருக்கிறது. எனவே அப்படிப்பட்ட அந்த பேராபத்திலிருந்து நாம் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு நாம் அறிவித்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அந்தத் திட்டங்களைப் பார்த்து விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்புவது, இதே பி.ஜே.பி. ஆட்சி 2014-ம் ஆண்டு பொறுப்பேற்பதற்கு முன்னால் – தேர்தலுக்கு முன்னால் அறிவித்த உறுதிமொழிகளில் ஏதாவது ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? நான் ஆட்சிக்கு வந்தால் என்று இன்றைக்குப் பிரதமராக இருக்கும் மோடி சொன்னது, வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணங்களை எல்லாம் நான் மீட்டுக்கொண்டு வந்து, அவற்றை எல்லாம் நாட்டில் இருக்கும் மக்களுக்கு ஒரு தலைக்கு – ஒரு நபருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்குவேன் என்று உறுதிமொழி தந்தார். பதினைந்து லட்சம் வேண்டாம், பதினைந்து ஆயிரமாவது வழங்கியிருக்கிறாரா? பதினைந்து ஆயிரம் வேண்டாம், 15 ரூபாயாவது வழங்கியிருக்கிறாரா? கிடையாது. இதுவரை அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை, அதைப் பற்றிக் கேட்கவே இல்லை. அதைப் பற்றி பேசவே இல்லை.

மாதம் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்தித் தருவோம் என்றெல்லாம் உறுதிமொழி தந்தார்கள். ஆனால் அந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் விவசாயிகள் நலனை பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இதே டெல்லி மாநகரத்தில் – இந்தியாவின் தலைநகரத்தில் விவசாயிகள் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தை, ஆண்டு கணக்கில் நடத்தி, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த அந்த கொடுமைகள் எல்லாம் நடந்தது. கடுமையான குளிரில் – கொடுமையான வெயிலில் – மழையில் – பல்வேறு சித்ரவதையை ஏற்றுக்கொண்டு அந்த போராட்டத்தை நடத்தியபோது அதை பற்றி கண்டும் காணாமல் இருந்த ஆட்சி பி.ஜே.பி. ஆட்சி. அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் ஓரளவிற்கு அதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையை அவர்கள் பெற்றார்கள்.

எனவே இதையெல்லாம் உணர்ந்துதான், இப்படிப்பட்ட ஒரு மோசமான – சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை இந்திய நாட்டிற்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு, அண்மையில் பீகார் மாநிலத்தில் – பாட்னாவில் அங்கிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமார் முயற்சியின் காரணமாக எதிர்க்கட்சிகளை சார்ந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற அந்த ஒரு கருத்தை அடிப்படையாக வைத்து அந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து வருகின்ற 17, 18 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலத்தில் – பெங்களூரு நகரத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே இதைல்லாம் பார்த்து எரிச்சல் பட்டுக்கொண்டிருக்கும் பி.ஜே.பி. ஆட்சி, குறிப்பாக அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி, இன்றைக்கு பிரதமர் என்ற அந்த நிலையிலிருந்து மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார், உளறிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் எந்த சூழ்நிலை வந்தாலும், ஏன் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி இம்மியளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கொள்கை – நம்முடைய லட்சியம் ஒரே ஒரு கொள்கையாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சிகளில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு நாம் இந்த களத்தில் இறங்கி இருக்கிறோம்.

இன்றைக்கு ‘திராவிட மாடல் ஆட்சி’ தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் நாம் என்னென்ன உறுதிமொழிகளை-வாக்குறுதிகளைத் தந்தோமோ, அவைகள் எல்லாம் இன்றைக்கு எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம், தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பசியோடு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்-மாணவ-மாணவிகள் அவர்களுக்காக ‘காலை உணவு திட்டம்’, பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய அறிவித்த அந்தத் திட்டம், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் நுழையும் மாணவியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி நம்முடைய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் பெயரால் உருவாகியிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது என்ற செய்தியையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு கோடிப் பேர் அதைப் பெற இருக்கிறார்கள். எனவே சிலருக்கு இன்றைக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரம் வந்திருக்கிறது. பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் இன்றைக்கு விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சூழ்நிலை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.