15 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 15 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 500 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரியன் ரோஸ், கீரின்ஸ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து படகில் இருந்த பிரியன் ரோஸ், ஜார்ஜ், அந்தோணி, பிரதீபன், ஈஷாக், ஜான், ஜனகர், கிறிஸ்து, ஆரோக்கியராஜ், ஜெர்மஸ், ஆரோக்கியம், ரமேஷ், ஜெகன், பிரபு, மெல்டன் ஆகிய 15 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதனைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் IND-TN-10-MM-677 மற்றும் IND-TN-10-MM-913 பதிவு எண்கள் கொண்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இச்சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் நன்கு அறிவார் என்றும், தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வரும் நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும் எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.