செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான்: நீதிபதி கார்த்திகேயன்!

செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான் என்று 3-வது நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்தத் தடையும் கோரமுடியாது என்றும் செந்திலாபாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு எதிராக அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு நீதிபதி நிஷா பானு ஏற்றார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை, மருத்துவமனையில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவல் காலமாக கருதப்படாது. மருத்துவ ரீதியாக தகுதி பெற்றபின்உரிய நீதிமன்ற அனுமதி பெற்று செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கலாம் என நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறினார்.

இதையடுத்து 3-வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். கடந்த 11-ந்தேதி முதல் 3-வது நீதிபதி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 3-வது நாளாக இன்று வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியதாவது:-

நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணை தொடரலாம். அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களை கேட்டபின் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில் உடன்படுகிறேன். அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. கைது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது, ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல.

தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நீருபிக்கட்டும். அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால் காவலில் எடுக்கவேண்டியது அவசியம். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோருவது அவர்களின் உரிமை என்று நீதிபதி கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அனுமதி அளித்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பரதசக்கரவர்த்தியின் உத்தரவை 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உறுதி செய்தார். செந்தில் பாலாஜியை காவலில் விசாரிப்பதில் நீதிபதி பரதசக்கரவர்த்தியின் உத்தரவில் உடன்படுவதாக நீதிபதி கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.

சிகிச்சை காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா என்பதை பொறுத்தவரை சட்டப்படி முதல் 15 நாட்களில் காவலில் எடுக்க வேண்டும். காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்த போதும் அவரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சிக்கவில்லை. செந்தில் பாலாஜி உடல்நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது என்று நீதிபதி கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கைது சட்டப்பூர்வமானது என்றால் நீதிமன்ற காவலும் சட்டப்பூர்வமானதே என்றும் நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார். கைதுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்பதை ஏற்க முடியாது. காலை முதலே அமலாக்கத்துறை சோதனை நடத்தியது; எனவே கைதுக்கான காரணம் செந்தில் பாலாஜிக்கு தெரியும். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று 3-வது கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கில் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் அமர்வு வழங்குவர். செந்தில் பாலாஜி வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி மீண்டும் விசாரிக்க உள்ளனர். இரு நீதிபதிகள் முரண்பட்டதால் தனது கருத்தை தெரிவித்து தலைமை நீதிபதிக்கு வழக்கை அனுப்பினார். செந்தில் பாலாஜி வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வுக்கு மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்த கருத்துகள் 2 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பப்படும். 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்க இயலாது; எது சரியானது என்பதை மட்டுமே முடிவு செய்ய இயலும். 3வது நீதிபதியின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு இறுதி தீர்ப்பை வழங்கும் என்று நீதிபதி கார்த்திகேயன் கூறியுள்ளார்.