இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த 7 மீனவர்கள், நாகை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்கள், கடலூரை சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தம் 22 பேர், கடந்த மே 22ம் தேதி அதிகாலை 3 விசைப்படகுகளில் மண்டபம் பகுதியில், இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர். பின்னர் 22 தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களின் 3 விசை படகுகள், மீன்பிடி வலைகள், பிடித்திருந்த மீன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் 22 மீனவர்கள் வீடு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பிரதமர், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் அவசர கடிதம் எழுதினார். இதையடுத்து இலங்கை அரசு அதிகாரிகளிடம் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் கடந்த 26ம் தேதி 22 தமிழக மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து, மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர், அவசர பாஸ்போர்ட், விசாவுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து கொழும்புவில் இருந்து ஏர்இந்தியா விமானத்தில் 22 தமிழக மீனவர்களும் நேற்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி, அவர்களை வரவேற்றனர். பின்னர் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.