பெங்களூரில் ‘ஊழல் திலகங்கள்’ சந்தித்து பேசியுள்ளனர்: நரேந்திர மோடி

பெங்களூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதை, ஊழல் திலகங்களின் சந்திப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தக் கட்சிகள் இணைந்து மகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நேற்று பெங்களூரில் இந்தக் கட்சியின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் ப்ளேர் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட முனையத்தை காணொலிக் காட்சி மூலமாக மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பாஜக அரசு தினம் தினம் நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறது. ஆனால், தங்கள் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதையே கடமையாக கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாஜகவை வீழ்த்த வேண்டும் என சூளுரைத்து இருக்கிறார்கள். நாட்டில் உள்ள மிகப்பெரிய ஊழல் திலகங்கள் பெங்களூரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அவர்களின் தாரக மந்திரமே அவர்களின் ‘குடும்பம்’ மட்டும் தான். தங்களின் ஊழல் பணத்தை காப்பாற்றுவதற்காக ஊழல்வாதிகள் ஒன்றாக இணைவதுதான் எதிர்க்கட்சிகளின் கூட்டணி. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.