நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் அறிக்கை விடுவது உரிமை மீறல்: மல்லிகார்ஜுன கார்கே

கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அறிக்கை கொடுத்தது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பேட்டி அளித்தார். ஆனால் கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை கொடுத்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது அவைக்கு வெளியே அறிக்கை விட்டதன் மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்ற உரிமைகளை மீறியுள்ளார். இது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானதும் ஆகும்’ என தெரிவித்தார். இவ்வாறு நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை வெளியிடுவதை தவிர்த்து அவைக்கு உள்ளே பிரதமர் பேச வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

முன்னதாக மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரிய மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதை சுட்டிக்காட்டினார். அதாவது, ‘மணிப்பூர் பற்றி எரிகிறது. பெண்கள் கற்பழிக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றனர். ஆனால் பிரதமர் மவுனமாக இருக்கிறார். அதேநேரம் நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிக்கை அளிக்கிறார்’ என குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில், 26 கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் முதலாவது கூட்டம் நடந்தது. ஜனாதிபதி ஆட்சி அந்த கூட்டத்துக்கு பிறகு மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

மணிப்பூரில் இன வன்முறை தொடங்கி சுமார் 80 நாட்கள் ஆகிறது. இருப்பினும், பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. பிரான்ஸ் செல்வதற்கும், அமெரிக்கா செல்வதற்கும், 38 கட்சிகள் கூட்டத்தை கூட்டுவதற்கும் நேரம் இருக்கிறது. ஆனால், மணிப்பூர் செல்ல நேரம் இல்லை. அதுபற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. மிகுந்த கொந்தளிப்பு ஏற்பட்ட பிறகு, நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியுள்ளார். மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மணிப்பூர் மாநில முதல்-மந்திரி உடனடியாக நீக்கப்பட வேண்டும். அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

26 கட்சிகளின் கோரிக்கை தெளிவானது. மணிப்பூரில் நடந்த கொடிய நிகழ்வுகள் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு விவாதம் நடத்தப்பட வேண்டும். இதுதான் முதல் பணியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ”இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் வெட்கக்கேடானது. பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக, நாங்கள் இதை சபையில் எழுப்புவோம். நாடாளுமன்றம் மூலமாக நாட்டுக்கு பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங், ”பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். உணர்வுபூர்வமற்ற, கொடூரமான தலைவர் நாட்டை ஆள்கிறார்” என்று கூறினார்.