வேங்கை வயல் சம்பவத்தில் மாநில அரசு தோல்வியுற்றுள்ளது: வானதி சீனிவாசன்!

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலின் போது பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெற்றன என்றும், சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு வேங்கை வயல் விவகாரம் பெரும் கரும்புள்ளியாக உள்ளது என்றும் கோவையில் வானதி சீனிவாசன் கூறினார்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணிப்பூர் சம்பவம் ஒட்டு மொத்த மனித நாகரீகத்திற்கே எதிரானது. எந்த ஒரு நபராலும் சகித்துக் கொள்ள முடியாத.. ஜீரணிக்க முடியாத சம்பவம் அது. எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை மன்னிக்க முடியாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை எது உள்ளதோ அதை வழங்க வேண்டும். அதே நேரத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் நாட்டில் எந்த இடத்தில் நடந்தாலும் அது கட்சி பாகுபடின்றி.. மநில அரசு மத்திய அரசு பாகுபடின்றி ஒட்டுமொத்த சமூகமும் எதிர்க்க வேண்டும். செலக்டிவாக ஒரு சம்பவத்தை மட்டுமே கண்டனத்திற்கு உரியதாக மாற்றுவதும். இதேபோன்று மற்ற சபம்பவங்கள் நடக்கிற போதும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் அரசியல் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது.

மணிப்பூர் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரும்ப திரும்ப பார்க்கும் போது அதிர்ச்சியை மட்டும் ஏற்படுத்துவது மட்டும் இன்றி சமூகத்தில் ஒரு அமைதியின்மையை கூட ஏற்படுத்துகிறது. மணிப்பூரில் பாதிப்பு மேலும் அதிகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், மேற்கு வங்காளத்திலும் சரி.. தமிழகத்திலும் சரி.. ஏன் ராஜஸ்தானில் ஒரு மாநிலத்தில் அமைச்சர் சொல்கிறார்.. மணிப்பூர் பற்றி பேசுகிறீர்களே.. ராஜஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மணிப்பூருக்காக காங்கிரஸ் அரசு, பெண்கள் நிலைமையை பற்றி குறிப்பிடும் போது அமைச்சரவையில் இருந்து நீக்குகிறார்கள்.

மேற்கு வங்காளத்தில் நானே நேரடி சாட்சியாக இருந்து இருக்கிறேன். 2021 தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக பெண்கள் மணிப்பூர் சம்பவத்தை விட மிக மிக மோசமாக நடத்தப்பட்டு இருந்தார்கள். மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலின் போது பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் நடைபெற்றன. இது தொடர்பாக எங்கள் பெண் எம்.பிக்கள் நேரடியாக ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நடக்கும் குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டும் கொதித்து எழுந்து வராமல் ஒட்டுமொத்தமாகவே இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் நோக்கத்தில் செயல்பாடு இருக்க வேண்டும். சமூக நீதி பேசும் ஒரு மாநிலத்தில் வேங்கைவயல் மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்று இத்தனை நாட்களுக்கு பிறகு கூட அரசாங்கத்தால் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என்பது உங்களோட நிலைப்பாடை சந்தேகம் கொள்ள வைப்பதாக உள்ளது. வேங்கை வயல் விவகாரத்தில் அது கிராமம்.. குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாது என்று நீங்கள் பதில் சொல்கிறீர்கள். ஆனால் அடுத்தவர்கள் விஷயத்தில் மட்டும் உங்களின் நியாயம் மாறுபடுகிறது. அதனால், சமூக நீதி பேசும் கட்சிகளுக்கு வேங்கை வயல் விவகாரம் பெரும் கரும்புள்ளியாக உள்ளது. மாநில அரசு இதில் தோல்வியுற்று இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.