தமிழ் மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்வதை திமுக அரசு தடுப்பது ஏன்: நாராயணன் திருப்பதி!

அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் அதே நாளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கும் நடத்துவது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாணவ‌ர்களு‌க்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கான அனுமதி கிடைக்கவுள்ள நிலையில், அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் அதே நாளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கும் நடத்துவது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின்னர் மாநில கவுன்சிலிங் நடைபெற்றால் மேலும் நூற்றுக்கும் அதிகமான தமிழக மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவார்கள். அகில இந்திய கவுன்சிலிங் நடைபெறும் அதே நேரத்தில் மாநில கவுன்சிலிங் நடைபெற்றால், அகில இந்திய கவுன்சிலிங்குக்கு தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். அதனால், தமிழக மாணவர்களுக்கு கிடைக்க கூடிய மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு பிற மாநில மாணவர்களை சென்றடையும். மற்ற மாநிலங்கள் இதை பின்பற்றும் போது, தமிழகம் மட்டும் அதே நாளில் நடத்துவது ஏன்? நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்வதை திமுக அரசு தடுப்பது ஏன்? திமுகவின் தமிழர் விரோத போக்கு ஏன்?. இவ்வாறு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.