இலங்கையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக்கூடாது: ஜிகே வாசன்!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் தமாக தலைவருமான ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களை ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை யாழ்பாணம் சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும் வலியுறத்தியுள்ளார் ஜிகே வாசன். இதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

நேற்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள ஜிகே வாசன், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் 2 விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை கடற்படையினர் வங்கக் கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதும், சிறைப்பிடித்துச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது என்றும், இது இனியும் தொடரக்கூடாது, முறியடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். காரணம் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலானது இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையால் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது என்றும் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

எனவே மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் இனியும் நீடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.