நான் மக்களை சந்தித்து பதவிக்கு வந்தேன்: உதயநிதி ஸ்டாலின்!நான் மக்களை சந்தித்து பதவிக்கு வந்தேன்: உதயநிதி ஸ்டாலின்!

நான் மக்களைச் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இந்த நிலைமைக்கு வந்துள்ளதாக அமித் ஷாவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க மு.க.ஸ்டாலின் உழைக்கிறார் என்று மத்திய மந்திரி அமித்ஷா ராமேசுவரத்தில் நேற்று பேசியதற்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:-

நேற்று ராமேசுவரத்துக்கு வந்த அமித்ஷா என்னைப் பற்றி பேசி இருக்கிறார். என்னை முதலமைச்சர் ஆக்குவதுதான் முதலமைச்சர் லட்சியமாம். நான் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இன்று இந்த பதவிக்கு வந்திருக்கிறேன். நான் அமித்ஷாவை கேட்கிறேன். உங்கள் மகன் ஜெய்ஷா கிரிக்கெட் சங்க தலைவர் ஆகியிருக்கிறாரே, அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? நான் ஏதாவது கேட்டேனா? ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2014-ல் வெறும் ரூ.74 லட்சம் தான். இப்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி. இது எப்படி வந்தது? இந்த திடீர் வளர்ச்சி எப்படி வந்தது? இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.