மத்திய அரசிடம் இன்னும் பிச்சை எடுக்கும் நிலையில்தான் இருக்கிறோம்: சீமான்

என்னதான் மாநில சுயாட்சி பேசினாலும் மத்திய அரசிடம் பிச்சை எடுக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு மிகவும் குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கி வருவது குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:-

ஆமா.. ஒன்னும் கொடுக்குறதில்ல. நான் (தமிழ்நாடு) 3 ரூபாய் கொடுத்தால் 40 காசைதான் மத்திய அரசு திருப்பிக் கொடுக்குது. ஆனால் பீகார், உத்தரபிரதேசம் எல்லாம் 3 ரூபாய் கொடுத்தால் 4 ரூபாயை திருப்பிக் கொடுக்குது. இந்தியாவின் பொருளாதாரத்தை நிரப்புறதுல முதல் இடம் மகாராஷ்ட்ரா. இரண்டாவது இடம் தமிழ்நாடு. மூன்றாவது கர்நாடகா. இதில் ரெண்டு மாநிலங்கள் தெற்கில் தான் இருக்கு. எங்களுக்கு நீங்க என்ன திருப்பி தர்றீங்க? ஒரு பேரிடர் காலத்துல கூட உன்ட்ட நாங்க பிச்சைதான எடுக்க வேண்டி இருக்கு.

மாநில சுயாட்சி பேசினது திமுக தானே. மாநிலத்துக்கு என்ன உரிமை இருக்கு? எல்லாத்தையும் மத்திய அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துட்டீங்க. அப்புறம் சும்மா மாநில தன்னாட்சி, மாநில சுயாட்சினு பேசிட்டு இருக்க வேண்டியது. உங்களுக்குலாம் வேற வேலை இல்ல. மத்திய அரசை விடுங்க.. தமிழ்நாடு அரசு என்ன பண்ணுது.. ஏதாவது பிரச்சினைனா உடனே சிபிஐ விசாரணைனு சொல்லுது. உனக்கு வெட்கமா இல்ல. அப்புறது எதுக்கு சுயாட்சி பற்றி நீ பேசுற? ஏன் தமிழ்நாடு போலீஸுக்கு திறமை இல்லையா? நம்ம சிபிசிஐடிக்கு தகுதி இல்லையா?

8 லட்சம் கோடி கடன் வச்சிருக்குற இந்த அரசு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன். கல்லூரிக்கு போற பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன். எங்கே இருந்து இந்தப் பணத்தை கொடுக்குற? உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே கிடையாதா?

என் காசை எடுத்து எனக்கே கொடுக்குறதுக்கு கலைஞர் உதவித்தொகை, கலைஞர் உரிமைத் தொகைனு வேற பெயர் வைக்க வேண்டியது. அதுல கலைஞருக்கு என்ன உரிமை இருக்கு? கலைஞர் உரிமைத் தொகை எங்கிருந்து வந்தது? நீங்க என்ன ராஜராஜ சோழ பரம்பரையா? சொத்தை எல்லாம் வித்துட்டு நீ எனக்கு காசு கொடுக்குறியா?

என் அம்மா அப்பாட்ட இருந்து எடுத்து, என் மாமன், மச்சான், சொந்தக்காரனை எல்லாம் குடிக்க வச்சு கெடுத்து, அவங்ககிட்ட இருந்து காசை பறிச்சு அதுல இருந்து எங்களுக்கு 1000 ரூபா கொடுக்குற. நீ எனக்கு ஓட்டு போட்டு பாரு. நான் உலகத்துக்கே உணவு ஏற்றுமதி செஞ்சு காட்டுறேன். விவசாயத்தையே அரசு வேலையாக மாத்திருவேன். உன் டாஸ்மாக் கடையில் மதுவை ஊத்திக் கொடுக்குறவன் அரசுப் பணியாளரா இருக்கும் போது, உலகத்துக்கு சாப்பாடு போடுற விவசாயி அரசுப் பணியாளனா இருக்கக் கூடாதா? இவ்வாறு சீமான் கேள்வியெழுப்பினார்.