இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

பாஜவின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாயா குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது:-

ஒவ்வொரு தனி மனிதர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியது தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சமுதாயத்தில் தனி மனித வளர்ச்சி என்பது நிறைய பிரச்னைகளை உருவாக்கும். ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்தால்தான் நீர் உருவாகும். உலகத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்ப்பதால்தான் இடையூறு ஏற்படுகிறது. காரல் மார்க்ஸும் தனிமனித வளர்ச்சியில் தான் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், அது வேறு விதத்தில். குடும்பமாக இருப்பதிலும் சமூகமாக இருப்பதிலும் காரல் மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் தனிமனித வளர்ச்சியை குடும்பம் தடுக்கும் என்று அவர் நம்பினார். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. உண்மையில் சொல்லப்போனால், குடும்பம்தான் ஒரு மனிதனின் வளர்ச்சி பேருதவியாக இருக்கும். ஒருவரை சாதிக்க வைப்பதும், சமூகத்தில் சிறந்த மனிதராக மாற்றுவதும் குடும்பம்தான்

இந்தியா ராணுவத்திலும் பொருளாதாரத்திலும் மட்டும் வலிமையாக இருந்தால் போதாது. இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தை நான் எதிர்க்கிறேன். ஆனால் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இது ஒரு வரலாற்று தேவையாக மாறிப்போனது. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சமூக கட்டமைப்பை சீர்குலைத்தார்கள், காரல் மார்க்ஸ் போன்றவர்கள் நம்முடைய அனைத்து வகையான உணர்ச்சிகளையும் வேதியியல் மாற்றம் என்று சொன்னார்கள். அவர்கள் கூறியது இன்று வரை பிரதிபலிக்கிறது. டார்வின் என்கின்ற ஒரு சிறந்த மனிதர் கூறினார், குரங்கிலிருந்து தான் மனிதர்கள் வந்தார்கள் என்று கூறினார். நாம் அனைவரும் பள்ளி, கல்லூரிகளில் என அனைத்திலும் டார்வின் கோட்பாட்டை படித்தோம், அனைவரும் அதை நம்புவதில்லை, ஆனால் சிலர் அதனை முழுமையாக நம்புகிறார்கள். இதன் வழியாக தான் புரட்சி ஏற்பட்டது என்றும் நாம் அனைவரும் குரங்கிலிருந்து தான் பரிணமித்தோம் என்பதையும் டார்வின் கூறினார். டார்வின் முதலாளித்துவத்தின் தார்மீகத்தை நியாயப்படுத்தினார். தற்போதும் இந்தியாவில் குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தான் என்பது குறித்து நாம் விவாதித்து வருகிறோம், படித்து வருகிறோம். தேர்வுகளிலும் கேள்விகளாக கேட்கப்படுகிறது. இந்திய குடிமை பணி தேர்வுகளில் கூட இது குறித்த கேள்விகள் வருகிறது.

சொல்லப்போனால், அனைத்து இந்தியர்களும் ஒரு மரத்தின் ஆயிரக்கணக்கான இலைகள் தான். இங்கு இருக்கும் நாம் அனைவரும் ஒரே குடும்பம் தான். எனவே, மரத்தில் இருக்கும் இலைகள், பிரிந்து சென்றால் அவைகள் எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் போய்விடும். எனவே, மக்கள் அனைவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும். நீங்கள் கடற்கரைக்குச் சென்றால், அங்கே லட்சக்கணக்கான அலைகளை நாம் பார்க்கலாம்.. அதுபோல லட்சக்கணக்கான அலைகள் ஒன்றாகச் சேர்ந்தது தான் இந்தியப் பெருங்கடல். நமது இந்திய ராணுவத்திலும், பொருளாதாரத்திலும் மட்டும் வலிமையாக இருந்தால் அது போதவே போதாது.. நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும். இப்போது புதிது புதிதாக ஏதேதோ அடையாளங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் திராவிடம், ஆரியம் என்று தனித்தனியாக எதுவும் இல்லை. ஆனால், இப்போது தான் இவை எல்லாம் சொல்கிறார்கள். இது பிரிவினையைத் தான் ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.