சமூக நீதிக்கு திமுக அரசு பெரும் பிழை இழைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். மேடைகளிலும் படங்களிலும் மட்டும் போலி சமூகநீதி பேசி வரும் இந்த அரசு உண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இத்தகைய துரோகம் இழைத்திருப்பது, இவர்களின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி. இந்த அரசு உடனடியாக SCSP நிதியை உரிய துறையில் ஒப்படைக்க வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.