மணிப்பூர் விவகாரத்தில் சிறு விளக்கம் அளிக்க கூட பிரதமர் தயாராக இல்லை: கார்கே

மணிப்பூர் விவகாரம் குறித்து சிறு விளக்கம் அளிக்க கூட பிரதமர் நரேந்திர மோடி தயாராக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி 9 நாள்களாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்ததை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

பிரதமர் மோடி பிற விஷயங்களை பேசுகிறார். ஆனால், எங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கிறார். மணிப்பூர் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஆனால், நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் விவாதத்துக்கு வரவில்லை என்று குழப்பத்தை உண்டாக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால், 11 நாள்களாக நாங்கள் காத்துக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.