9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகளை அரசு கட்டிக் கொடுத்துள்ளது: பிரதமர் மோடி

மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமான வீடுகளை கட்டிக் கொடுத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவின் புனே நகருக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விருதைப் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:-

தனிப்பட்ட முறையில் நினைவுகூரத்தக்க நிகழ்வு இது. நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன். பால கங்காதர திலகர், சுதந்திர போராட்டத்தின் திலகமாகத் திகழ்பவர். பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தின் போக்கையே மாற்றியவர் திலகர். நாட்டில் நிகழும் போராட்டங்களுக்கு எல்லாம் தந்தையாக இருப்பவர் பால கங்காதர திலகர் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை கருதினர்.

விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற அவரது பெயரிலான விருதைப் பெற்றதை கவுரவமாகக் கருதுகிறேன். வெளிநாட்டு ஊடுருவல்காரர்களின் பெயர்கள் மாற்றப்படுவது சிலருக்கு ஏற்கத்தக்கதாக இருப்பதில்லை. இளம் திறமையாளர்களை அடையாளம் காண்பதில் லோகமான்ய திலகர் சிறந்து விளங்கினார். அதற்கு வீர சாவர்க்கர் ஒரு உதாரணம். வீர சாவர்க்கரின் திறமையை நன்கு அறிந்தவராக திலகர் இருந்தார்.

இந்தியாவின் பயணம் என்பது நம்பிக்கை பற்றாக்குறை என்ற நிலையில் இருந்து உபரி நம்பிக்கை என்ற நிலைக்கு வந்திருக்கிறது. உபரி நம்பிக்கை என்பது கொள்கைகளிலும், மக்களின் கடின உழைப்பிலும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. நம்பிக்கை இல்லாத இடத்தில் வளர்ச்சிக்கு இடம் இருக்காது. தற்போது நாட்டு மக்களிடையே நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மக்கள் நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக நாட்டை அவர்கள் உயர்த்தி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். லோகமான்ய திலக் தேசிய விருதுடன் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்கி உள்ளதாக மோடி தெரிவித்தார்.

புனே நகரின் இரண்டு வழித்தடங்களில் கட்டி முடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பின்னர், சிவாஜி நகர் காவல்துறை தலைமையகத்தில் வீடு கட்டும் திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “புனே நகரில் வாழும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் அரசு மிகவும் தீவிரமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் திட்டத்திற்கான அடிக்கல் தற்போது நாட்டப்படுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்போது இந்த நகரமும் வளர்ச்சி காணும். கடந்த 9 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிமான வீடுகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்திருக்கிறது. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இத்தகைய வீடுகளின் உரிமையாளர்களாக கோடிக்கணக்கான பெண்கள் மாறி இருக்கிறார்கள். இதன்மூலம் கோடிக்கணக்கான பெண் லட்சாதிபதிகள் உருவாகி இருக்கிறார்கள். ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே, தற்போது புனே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், ரயில்வே மேம்பாட்டுக்காக 12 மடங்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது” என தெரிவித்தார்.