சேலம் சிறையில் சாராயம் காய்ச்சியவர்களை தண்டிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சிறைச் சாலை என்பது தவறு செய்தவர்களை திருத்துவதற்கான இடமே தவிர, மேலும் மேலும் அவர்கள் தவறுகளை செய்யத் தூண்டும் இடமாகவும், அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருப்பதும் சமூக அக்கறை கொண்ட யாராலும் ஏற்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஊழலும், ஊறலும் இரு கண்களாகக் கொண்டு அராஜக விடியா திமுக அரசு செயல்படுவதாக

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த இரண்டாண்டு கால மக்கள் விரோத திமுக ஆட்சியில், சமூக விரோதிகள் அதிகரித்து வருவதோடு, சமூக விரோதச் செயல்களின் கூடாரமாகவும் தமிழகம் மாறி இருப்பதை அவ்வப்போது அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் சுட்டிக் காட்டியுள்ளேன். தொடர்ந்து இந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது,”திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்” என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளை முணுமுணுத்தவாறு, மக்கள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.

தமிழகத்தில் ஒருசில இடங்களில், அவ்வப்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவது இருந்து வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களின் போது கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்றவை முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டன. வெளி மாநிலங்களில் இருந்து சாராயம் கடத்தி வரப்படுவதும் முற்றிலும் தடுக்கப்பட்டது. இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் கன ஜோராக நடந்துவருவது மட்டுமின்றி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடித்தது கள்ளச் சாராயமா ? விஷச் சாராயமா? என்ற பட்டிமன்றத்தைத் தான் இந்த விடியா திமுக அரசு நடத்தியதே தவிர, சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசின் டாஸ்மாக் கடையில் மது குடித்தவர்கள் மரணமடைந்த அவலங்கள் நிகழ்ந்தபோது, அவர்கள் சயனைடு அருந்தி இறந்ததாக புதுக் கரடி ஒன்றை இந்த அரசு அவிழ்த்து விட்டது. ஏதோ கிராமப் புறங்களில்தான் பூமிக்குள் சாராயம் புதைக்கப்பட்டு இருக்கிறது என்றால், சென்னையில் காவல் துறை தலைமை அலுவலகம் (DGP Office) எதிரே, மெரினா கடற்கரையில், விதிவசத்தால் தற்போது முதலமைச்சராக உள்ள திரு. ஸ்டாலின் செல்லும் சாலையின் அருகிலேயே சாராய ஊறல்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததும், அவைகள் எதிர்பாராத விதமாக வெளியே எடுக்கப்பட்டதும், விடியா திமுக அரசின் செயலற்ற தன்மையின் உச்சமாகும்.

சேலம் மத்திய சிறையில், கைதிகள் சாராய ஊறல்களைத் தயாரித்து பூமியில் புதைத்து வைத்ததாகவும், அவைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விடியா ஆட்சியில், சிறைக்குள் கஞ்சா உட்பட போதைப் பொருட்களும், செல்போனும், சிம் கார்டுகளும் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சாராய ஊறல் தயாரிப்பு என்பது, தமிழகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுப் போயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். சிறைச் சாலை என்பது தவறு செய்தவர்களை திருத்துவதற்கான இடமே தவிர, மேலும் மேலும் அவர்கள் தவறுகளை செய்யத் தூண்டும் இடமாகவும், அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருப்பதும் சமூக அக்கறை கொண்ட யாராலும் ஏற்க முடியாது.

70 வயதைக் கடந்த பின்னும், தான் இன்னும் 20 வயது இளைஞராக இருப்பதாக முதலமைச்சர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறி இருக்கிறார். ஆனால், தமிழக மக்கள் அனைவரும் அவரைப் போலவே திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வராதது ஏன் என்று புரியவில்லை? உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை கொண்ட முதலமைச்சராக இவர் இருந்தால், இதுபோன்ற சமூக விரோதச் செயல்கள் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை மூலம் தகவல் அறிந்து நடவடிக்கை எடுத்திருப்பார்.

குடும்ப பாசத்தில் சிக்கித் தவிக்கும் முதலமைச்சர், பிரச்சனைகளில் சிக்கியுள்ள தனது மந்திரிகளைக் காப்பாற்றுவது எப்படி என்ற எண்ணத்தில் அல்லும் பகலும் பாடுபட்டுவரும் முதலமைச்சர் பொதுமக்கள் நலன் குறித்தோ, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு பற்றியோ கவலைப்படாமல் ஊழலையும், ஊறலையும் ஊக்குவிக்கும் விதத்தில் செயல்படுவது காலத்தின் கொடுமையாகும். சேலம் மத்திய சிறையில் நடந்தது போல், மற்ற சிறைகளிலும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீதும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மற்றொறு அறிக்கையில், “மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்து, அனைவருடைய இதயங்களிலும் நீங்கா இடம்பெற்றிருப்பவர் அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர். வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம், ராயபுரம் பகுதி, 51-ஆவது வட்டம், காளிங்கராயன் தெருவில் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எம்ஜிஆரின் திரு உருவச் சிலையின் மீது நேற்று (1.8.2023) நள்ளிரவு, விஷமிகள் பெயின்ட்டை ஊற்றி உள்ளனர். இச்செயல் மிகுந்த கண்டனத்துக்குரியதாகும். மேலும், இந்நிகழ்வு கோடான கோடி கழகத் தொண்டர்களின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது.

மக்கள் அனைவராலும் போற்றி வணங்கப்பட்டு வரும் எம்ஜிஆர் சிலையின் மீது பெயின்ட் ஊற்றிய கயவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுக அரசின் முதல்வர் மு.க ஸ்டாலின், மக்கள் நலனைக் காப்பதிலும், சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தாமல், தனது குடும்பத்தை வளப்படுத்துவதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு வருவது நாடறிந்த உண்மை. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பில் உள்ள காவல் துறை, எம்ஜிஆர் சிலையின் மீது, பெயின்ட் ஊற்றிய கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.