கூட்டணியை பாதிக்கும் கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது: வானதி சீனிவாசன்

பாஜக மாநிலத் தலைவருக்கு, அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனி நபருக்கானது அல்ல என்பதை செல்லூர் ராஜூ போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணாமலையை விமர்சித்துப் பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையை பொறுத்தவரை பாஜகவின் மாநில தலைவர். ஜஸ்ட் லைக் அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித் ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். அதனால் தான் 38 கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை? எனப் பேசியிருந்தார் செல்லூர் ராஜூ.

இது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகப் பேசிய அண்ணாமலை, யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது. மேலும் நாங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என பதில் கொடுத்தார்.

இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அதிமுகவினர் கூட்டணியை பாதிக்கும் வகையில் பேசக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசன், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதனால் கூட்டணியை பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதிமுக தலைவர்களின் கருத்துக்களால் குழப்பம் ஏற்பட வேண்டாம். பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவருக்கு, அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனி நபருக்கானது அல்ல என்பதை செல்லூர் ராஜூ போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணியை பாதிக்கும் கருத்துக்களைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் மிக்கதாக உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.