ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்!

ஜம்மு காஷ்மீரின் குட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள குட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. குட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளார்கள் என்பதுதான் அது. உடனே குட்காமின் ஹலன் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அவர்கள் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை பார்த்தனர். உடனே அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக ராணுவ வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டார்கள். இரு தரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 ராணுவ வீரர்கள் மீது குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் வீர மரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவர்களை தேடும் பணியில் இந்த ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.