இந்தியா கூட்டணியினர் அனைவரும் இந்தியாவை சூறையாடியவர்கள்: அண்ணாமலை!

அமைச்சர் பிடிஆர் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஒரே ஒரு முறை உண்மையைப் பேசியதற்கு அவருக்கு கிடைத்த பரிசு அமைச்சரவை மாற்றம் என மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “என் மண்; என் மக்கள்” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலையின் பாதயாத்திரை இன்று திருப்பரங்குன்றம் தொகுதி, திருநகரில் தொடங்கி, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தைச் சென்றடைந்தது. அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றினார் அண்ணாமலை. அண்ணாமலை பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் என்று சொன்னாலே சௌராஷ்டிரா நெசவாளர்கள் அதிகமாக இருக்கும் ஊர். நெசவாளர்களுக்கு சில்க் சமத்ரா என்கிற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்து ரூ.115 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகரில் ரூ.500 கோடி மதிப்பில் மத்திய அரசு ஜவுளிப் பூங்கா அமைக்கவுள்ளது. திமுக அரசு தொடர்ந்து நெசவாளர்களை வஞ்சித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் தறியின் முன் அமர்ந்து நடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெசவாளர்களின் வலி எப்படித் தெரியும்? நூல் கொள்முதல் நிலையம், நெசவாளர்களுக்கென தனி வங்கி என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றி விட்டு, மின்சாரக் கட்டணத்தை 15% உயர்த்தியும், அரசு செய்யும் இலவச வேட்டி சேலை கொள்முதலில் 10% கமிஷன் அடிப்பதையும்தான் ஊழல் திமுக அரசு செய்து வருகிறது.

கடன் வாங்குவதில் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக முதல்வர் ஸ்டாலின் மாற்றி உள்ளார். மதுவினால் வரும் வருமானம் தொழு நோயாளி கையில் இருக்கும் வெண்ணெய்க்கு சமம். தற்போது முதல்வர் மதுவிலிருந்து வரும் பணத்தை வைத்து ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார். கள்ளுக் கடைகளை திறந்தால் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.

கிளி ஜோசியம் பார்த்தால் கிளி கூட அவ்வப்போது பேசும். ஆனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஒரே ஒரு முறை உண்மையைப் பேசியதற்கு அவருக்கு கிடைத்த பரிசு அமைச்சரவை மாற்றம். 24 கோடி பெண்கள் தான் 2014 வரை வங்கி கணக்கு வைத்திருந்தார்கள். தற்போது 79 கோடி பெண்கள் வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள். 2014 வரை 11 சதவீதம் பள்ளிகளில் தனி கழிப்பறை இல்லை. ஆனால் தற்போது நூறு சதவிதம் உள்ளது. ரஃபேல் விமானத்தில் தற்போது பெண்கள் பயணித்திருக்கிறார்கள். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு பிதாமர் மோடி தேவைப்பட்டு இருக்கிறார்.

இந்தத் தொகுதி எம்.பியாக மாணிக்கம் தாகூர் உள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார். அவர் டெல்லியில் தான் இருப்பார். அவரை நீங்கள் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். மதுரை மற்றும் விருதுநகர் எம்.பிக்களால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. கேரளாவில் உள்ள முதலமைச்சர் ராகுல் காந்தியை ஜோக்கர் என சொல்கிறார். ஆனால் இங்கு உள்ள கம்யூனிஸ்ட்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் இரண்டு எம்பிக்களும் வாயை திறக்கவில்லை. இவர்களை விட பெரிய டுபாக்கூர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவர் பெங்களூர் சென்றபோது 32 டிஎம்சி தண்ணீர் ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். அப்போது வாயில் கொழுக்கட்டை வைத்திருந்தாரா?

68 சதவீத பெண்களுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மகளிர் உரிமைத் தொகையில் 7000 கோடியில் 2500 கோடி மத்திய அரசின் பணம். அதை கொடுக்க வாய்ப்பு இல்லை. இந்தியா கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் இந்தியாவை சூறையாடியவர்கள். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் வித்தகர்களான திமுக காங்கிரஸ் கூட்டணியை இனியும் மக்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை. வரும் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மீண்டும் பாரதப் பிரதமராகப் பதவியேற்பது உறுதி. அதில் தமிழகத்தின் பெரும்பங்கும் நிச்சயமாக இருக்கும் என்பது இங்கு கூடியிருக்கும் மக்களின் பேராதரவில் தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.